Ad Code

Recent Posts

மேஜர் அகத்தியரின் வீர வரலாற்று நினைவுகள்

மேஜர் அகத்தியர்

செல்லத்துரை புவினேயராஜ்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு  

வீரப்பிறப்பு: 21.06.1967

வீரச்சாவு: 01.01.1990

  

நிகழ்வு: முசல்குளத்தியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


துயிலுமில்லம்: கொடிகாமம்


மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


புலேந்திரன் - குமரப்பா முதலான போராளிகள் இலங்கை - இந்திய கூட்டுச்சதிக்குப் பலியானதைத் தொடர்ந்து 'இனி யுத்த நிறுத்தம் இல்லை ' என தலைவர் பிரபாகரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் இடம்பெற்றது. 


இலங்கை மக்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவம், இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் உலா வருகையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்திய இராணுவத்தினரின் வாகனங்களைத் தவிர்த்து, இலங்கை இராணுவத்தைக் குறிவைத்து, மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இலண்டன் பி.பி.சி.வர்ணித்தது. இந்த வர்ணனை அக்காலத்தில் பிரபலமாக இருந்தது.


இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியும் சிரேட்ட பொலிஸ் அத்தியட்சருமான நிமால் டி சில்வாவுடன் ஒன்பது இராணுவத்தினரும் பலியாகினர். அவ்வளவு திறமையான இத்தாக்குதலை மேற்கொண்டவன்தான் மேஜர் அகத்தியர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்வி ஆறு என சிறப்பாகக் குறிப்பிடப்படும் கோட்டைக்கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த இவன், 1984 ஆம் ஆண்டு புலிகளுடன் தன்னை இணைந்துக்கொண்டான். விடுதலைப் புலிகளின் ஐந்தாவது முகாமில் பயிற்சி பெற்றுக்கொண்ட இவன், மருத்துவக் குழுவினருக்கான விசேடபயிற்சியையும் மேலதிகமாகப் பெற்றுக்கொண்டான். மீண்டும் இந்த மண்ணில் அவன் மருத்துவனாக காலடி எடுத்து வைத்தாலும், திறமை மிக்கஒரு போராட்ட வீரனாகவே இனங்காணப்பட்டான். அதனாலேதான், அபாயகரமான பகுதிகள் எனக்கருதப்படும் பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்படும் தாக்குதல்கள் இவனிடம் ஒப்படைக்கப்பட்டன.


மட்டக்களப்பு - - வாழைச் சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள வந்தாறுமூலை அம்பலத்தடிச் சந்தி, எமது போராளிகளில் கணிசமான பேரை பலிகொண்ட இடமாகும். ஏனெனில் இப்பகுதியில் இருந்தே எமது பயிற்சி முகாம்களுக்கான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதுண்டு. எனவே இப்பாதை மீது சிறீலங்காப் படையினருக்கு எப்போதுமே குறியிருக்கும். 


இப்பகுதியில் துப்பாக்கிச் சன்னத்தைக் காணாத சுவர்களே இல்லையெனலாம். ஆனால், இந்த அபாயகரமான பாதையில் சண்டையிடத்தான் இவனுக்கு விருப்பம். தன்னைப் போலவே ஏனைய போராளிகளையும் உருவாக்கினான். ஒரு கட்டுப்பாடான ஒழுக்கமான போராளியால் தான் ஒரு சிறந்த தலைமையை அளிக்கமுடியும். எனவே கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பன போராளிகளுக்கு வேண்டும் என வலியுறுத்துவான்.


மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியைப் பற்றி போராளிகள் குறிப்பிடும் போது “ஓடிணா வெளி, விழுந்தா வெளி” என்று குறிப்படுவார்கள். அப்படியான இயற்கை அமைப்பைக்கொண்ட அந்தப் பிரதேசத்தின் பொறுப்பாளனாக இவன் நியமிக்கப்பட்ட காலத்தில், இவன் எவ்வாறு போராளிகளைக் காப்பாற்றினான் என்பதை அறியும் போது ஒவ்வொருவர் நெஞ்சும் புல்லரிக்கும்.


மட்டக்களப்பில் இருந்து வளைந்து நீண்டுவரும் அந்த வாவிக்கரையில், தொம்பலும் (சேறு) கன்னாப்பற்றைகளும் ஒட்டு என்று அழைக்கப்படும் தாவரங்களும் நிறைந்திருக்கும் இப்பகுதிக்குள் இடுப்பளவு தண்ணீருக்குள்ளும் அதற்கு மேலும் இந்தப் பற்றைகளிடையே தடிகளினால் அரண் அமைத்து அவற்றையே முகாம் ஆக்கியிருந்தான். 


தேசத்துரோகிகள், எமது காற்றையே அசுத்தப்படுத்தும் வகையில் நிறைந்திருக்கும் இந்தியப் படையினர் இவர்களின் பார்வையில் படாது அந்த வயல்வெளிகளைக்கடந்து குளிர், நுளம்புத் தொல்லை மிகுந்த இந்த நீர்நிலை முகாம்களுக்குச் செல்வதென்றால் அதற்கு எவ்வளவு கவனம் தேவை. இந்த முகாம்களில் இருந்தே ஏனைய இடங்களுடன் தகவல் தொடர்பு எடுக்க வேண்டும். தொலைத் தொடர்புக் கருவிக்கு வேண்டும் பற்றரி கொண்டு செல்வதென்றால் கூட இலேசானதல்ல. ஆனால், இவன் அதையெல்லாம் செய்துகாட்டினான். அங்கிருந்தே தாக்குதலுக்குத் திட்டமிட்டான், போராடினான். இதற்கான மக்கள், பலத்தையும் திரட்டினான்.


இதனால்தான் 'புலிகளுக்கு குளிருக்கு போர்வையோ, உணவோ தேவையில்லை. ஆயுதங்களைக் கடலிற்குள் கூடப் புதைத்து வைத்தனர். இருட்டில்கூட அவற்றைத் தேடி எடுத்தனர் என பம்பாயில் வீக்லி இதழுக்கு பேட்டி அளித்தார் இந்தியப்படை எம் மீது போர் தொடுத்த காலத்தில் அதற்குப் பொறுப்பாயிருந்த இந்தியப்படை அதிகாரி.


இதேபோல வந்தாறுமூலைப் பகுதிக்கு அப்பால் முகாம்களை அமைக்கும்போது இயற்கையினை போராளிகளுக்கு அரணாக்கித் தந்தான். மலைகளுக்குப் பக்கத்தில் உள்ள குகைகளே பாதுகாப்பு அரண்கள். விமானக்குண்டு வீச்சின்போதும் எறிகணைத் தாக்குதல்களின்போதும் குகைகளுக்குள்ளேயே தனது வாரிசுகளைப் பாதுகாத்தான். உணவைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 15 மைல்தூரம் நடந்து வரும்போது முன்னே செல்வது இவன்தான். ஏனையோரைவிட கூடுதலான பாரம் சுமப்பதும் இவன்தான். ஆம்.... போராட்டத்தினுள் உள்வாங்கப்படும் போராளிகளுக்கு இவன் புத்தகமாகத் திகழ்ந்தான்.


எமது தேசத்தை குடியேற்றத்தின் மூலம் அபகரிக்க முயலும் பேரினவாதிகளுக்கு, இவன் கனவிலும் பயமூட்டிக் கொண்டிருந்தான் மேஜர் அகத்தியர்


இவனது தாக்குதல்கள் அவர்களைச் சொந்தப் பிரதேசங்களுக்கு ஓடவைத்தன. இந்திய இராணுவத்தினரின் காலத்தில் இவற்றைச் செய்வதென்பது சுலபமாக இருக்கவில்லை.


ஒருமுறை நீண்ட தொலைவில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் இலக்குமீது தாக்குதல் தொடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தனர் இவனும் இவனது வாரிசுகளும், அனைவருக்கும் நல்ல பசி. சோர்ந்து வாடினார்கள். போராட என்று வெளிக்கிட்டால் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்களை ஒருவாறு சமாளித்துகூட்டிக் கொண்டு வந்தான். இதே நேரம் சிங்களப்படை கொடுத்த தகவலின்பேரில் இந்தியப்படை இவர்களைத் தொடர்ந்துகொண்டிருந்தது. இவர்கள் அவர்களைக் காணவில்லை .


அந்தளவுக்கு பசி, இவர்கள் கண்ணை மறைத்திருந்தது. முகாமுக்குச் சென்று அனைவரும் வாயில் உணவை வைத்ததுதான் தாமதம், இந்தியப்படையின் துப்பாக்கி வேட்டுக்கள் எல்லாவற்றையும் மறக்கவைத்தன. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறி இந்தியப்படையை எதிர்க்க இன்னொரு பாதையில் காத்திருந்தனர். ஏனெனில் இது எமது நாடு. நாம் ஓடமுடியாது. ஓட வேண்டியவர்கள் எல்லை தெரியாது எம்மண்ணை மிதித்தார்களே. ஆனால் இந்தியர்கள் வரவேயில்லை. ஏனோ தெரியாது. அப்படியே போய்விட்டனர்.


அக்காலங்கள் மிக வேதனை நிறைந்தவை. பல இடங்களில் பாதுகாப்புக்காக இந்தி மொழி பேசியே பாதையைக் கடக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தின. இந்தியை விரட்ட பல கட்டங்களில் இந்தி மாதிரிமொழியில் பேசினான் அகத்தியர்.


பின்னர் மட்டக்களப்பு பிராந்தியத்தை விட்டு, வன்னிக் காடுகளுக்கு நெருக்கமானான் இவன். அங்கும் பல தாக்குதல்களில் கலந்துகொண்டான். இறுதியில் முசல்குத்தியில், தேசவிரோதிகளின் மீதான தாக்குதல்களில் கப்டன் முரளி, இரண்டாவது லெப். அலெக்ஸ் ஆகியோருடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். 


இத்தாக்குதலில் பல தேசத்துரோகிகள் உயிரிழந்தனர். வியட்னாமிலும், சிங்கராஜா காடுகளிலும் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கிய இவன், என்றும் மறக்கப்பட முடியாதவன். அதைவிட ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் தமிழீழ மக்கள் இவனை நினைவுகூரத் தவறமாட்டார்கள். ஏனெனில் இவன் வீரச்சாவெய்திய தினம் ஜனவரி 1.




-களத்தில் 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code