Ad Code

Recent Posts

08.03.2009 அன்று படையினரின் முல்லைத்தீவு ஆட்லறி தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புச் சமர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மீதான சிறிலங்கா முப்படையின் முற்றுகையும் அதற்கெதிரான  தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலும்.  


சிறிலங்கா இராணுவத்தின் 53;55.57.58 மற்றும் 59ஆவது டிவிசன்கள் வட  தமிழீழம்  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு இறுதிப் போருக்குதயாராகிக் கொண்டிருந்தவேளை எதிரியின் இத்திட்டத்தை முறியடிப்பதற்கான சிறந்ததொரு தாக்குதல் திட்டமொன்றை தேசியத் தலைவர் அவர்களால் மூத்த தளபதி சொர்ணம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. திட்டத்தின்படி அப்போது தேவிபுரம் பகுதியை இலங்கை இராணுவத்தின் 57மற்றும் 58ஆவது டிவிசன் படைகளை முற்றுமுழுதாக ஆக்கிரமித்து இருந்தனர். 


இவ் ஆக்கிரமித்த பகுதிக்குள் முல்லைத்தீவு சாலையிலிருந்து ஊடுருவி படையினருக்கெதிராக பாரிய  தாக்குதலைத் தொடுத்து தேவிபுரம் பகுதியைக் கைப்பற்றி பின்னர் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியூடாக புதுக்குடியிருப்பை நோக்கி ஒரு அணியும் தேவிபுரம் உள்வீதியூடாக இரணைப்பாலை நோக்கி மற்றுமொரு அணியும் நகரும் அதேசமயம் இவர்களுடன் சென்றவர்களும் ஏற்கனவே இராணுவம் ஆக்கிரமித்த பகுதிக்குள் நின்ற

கேணல் கிட்டுப்பீரங்கிப் படையணிப் போராளிகள் மற்றும் கரும்புலிகள் அணியும்  விசுவமடு தேராவில் பகுதிக்கு ஊடுருவி சென்று அங்கு நிலை நிறுத்தப்பட்ட ஆட்லறிகளுக்கு பாதுகாப்புக்கு நிற்க்கும் படையினர் மீது தாக்குதல் நடாத்தி ஆட்லறிகளை கைப்பற்றி கரும்புலிகள் கொடுக்க கேணல் கிட்டு பீரங்கிப் படையினர் அவ் ஆட்லறிகளை பயன்படுத்தி இணங்காணப்பட்ட இலங்கைப் படைத்துறை நிலைகளுக்கு தாக்குதல் நடாத்தி இவ் ஊடறுப்புத் தாக்குதல் அணிகளுக்கு வலுச்சேர்ப்பார்கள். அதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் மோட்டார் நிலைகளைக்கைப்பற்றி அங்கிருக்கும் மோட்டார்களைக் கொண்டு படையினருக்கெதிராகத் தாக்குதலை நடாத்தி அங்கிருக்கும் படையினரை அழித்து இம்முற்றுகையிலிருந்து மீண்டெழுவதே இத் தாக்குதல் திட்டமாகும்.


இத் தாக்குதல் பற்றி தான் வீரச்சாவடைந்தால் தனது உடலைத் தாண்டி தனக்கு அடுத்த நிலையில் இருந்த கட்டளைத் தளபதி லோறன்ஸ் அவர்கள் அணிகளை வழிநடாத்தவேண்டும்  என அணித்தலைவர்களிடம் தெளிவாக கூறினார் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள். அத்துடன் மருத்துவர் காந்தன் அவர்களோடு வரும் அணிகள் காயமடைகிறவர்களுக்கு சிகிச்சையளிப்பார்கள் என்றும் கூறினார்.

தேசியத் தலைவர் அவர்கள் கொடுத்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் மற்றும் கணனிப் பிரிவுச் சிறப்புத் தளபதி சாள்ஸ் அன்ரனி அவர்கள் மற்றும் தளபதிகள்  பொறுப்பாளர்கள் தலைமையில் தொளயிரம் ஆண் பெண் போராளிகள் 08.03.2009 அன்று அதிகாலை கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியில் உள்ள சாலையிலிருந்து  தேவிபுரம் பகுதிக்குள் ஊடுருவியிருந்தார்கள். ஊடுருவிய அணிகள்  அங்கு  பல்வேறு தாக்குதல்களை கிட்டத்தட்ட தொடர்ந்து மூன்று நாட்களாக இலங்கை இராணுவத்திற்க்கு எதிராக படைகட்டுபாட்டுப் பகுதியில் நின்று உறுதியோடு களமாடினார்கள். இவர்களுகான வழங்கல் நடவடிக்கைக்காக  இரணைப்பாலை பகுதியிலிருந்து கட்டளைத் தளபதி ரமேஷ் அவர்களின் தலைமையில் ஒரு அணி  உள் நுழைந்திருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைமையிலான அணியுடன் ஒரு வழங்கல் பாதையை ஏற்படுத்த முயற்சி  மேற்கொள்ளப்பட்டது அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.


இவர்களுடன் சென்ற கேணல் கிட்டு பீரங்கிப் படையினர் மற்றும் கரும்புலிகள் அணியினர் தங்களுக்கு கொடுத்த பணியினை செவ்வனவே செய்து முடித்தார்கள். இவ் இராணுவ நடவடிக்கையை களத்தில் மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் மூத்த தளபதி பொட்டு அவர்கள் ஒருங்கிணைக்க மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடாத்தினார்.இவ் ஊடறுப்புச் சமரை களத்தில் வழிநடாத்திய மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் பாரிய விழுப்புண்ணடைந்ததாலும் பிரதான வழங்கல் பாதையை கைப்பற்ற முடியாமல் போனதாலும் இச் சமர் வெற்றியளிக்காமல் போனதாலும் போராளிகள் தமது தளங்களுக்கு திரும்பினார். இதனால் ஏற்பட்ட  பலத்த சேதத்தினால்  இராணுவம் தன்னைப் புதுப்பித்து பின்நிலைகளைப் பலப்படுத்தி முன்னேற கால அவகாசம் ஏற்பட்டது.


இக்கால அவகாசத்தை பயன்படுத்தி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள புலிவீரர்கள் தங்களது நிலைகளை பலப்படுத்தினார்கள். இவ் ஊடறுப்புச் சமரை களத்தில் வழிநடாத்திய மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் இரண்டாம் நாள் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அணிகளை கட்டளைத் தளபதி லோறன்ஸ் அவர்களும் கணனிப் பிரிவுச் சிறப்புத் தளபதி சாள்ஸ் அன்ரனி அவர்களும் அணிகளை வழிநடாத்தி அணிகளையும் பாதுகாப்பாக சாளைத்தளத்திற்கும் பின்னகர்த்தினார்கள். இவ் இராணுவ நடவடிக்கையில் சாள்ஸ் அன்ரனி அவர்களும் காயமடைந்தார்.


தேராவிலில் ஆட்லறி படைத்தளத்தை கரும்புலிகள் தகர்த்தனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.


இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.


ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.


இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா படையினர் தரப்பில் 50-க்கும் அதிமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.


இத்தாக்குதலில் மூன்று கரும்புலிகள் உட் பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.


கரும்புலி லெப்.கேணல் மாறன்


கரும்புலி மேஜர் தமிழ்மாறன்


கரும்புலி கப்டன் கதிர்நிலவன்


மேஜர் மலர்ச்செம்மல்


கப்டன் ஈழவிழியன்


கப்டன் காலைக்கதிரவன்


கப்டன் கலைஇனியவன்


ஆகிய போராளிகளுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code